கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக இளம் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் - பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் முதல் ஓவரை கேப்டன் நிதிஷ் ராணாவே வீசினார். இந்த நிலையில் முதல் இரு பந்துகளில் அதிரடியாக சிக்சர் விளாசி ஜெய்ஸ்வால் மிரள வைத்தார். இதையடுத்து 3 பவுண்டரிகளை விளாசிய ஜெய்ஸ்வால், அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை விளாசி தள்ளினார்.
இதன்பின்னர் மீண்டும் 3வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் மூலம் 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். இவரது ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஸ்வால் அதிரடியை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி, "கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுதான்.. மிகச்சிறந்த திறமையாளர் ஜெய்ஸ்வால்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஜெய்ஸ்வால், தற்போது அதிவேக அரைசதம் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.