பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ்-க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகின்றனர். இன்று இரவு தொடங்க உள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இதில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவாரா அல்லது இஷான் கிஷன் தேர்வு செய்யப்படுவாரா என்ற ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், இந்திய அணி நிர்வாகம் இன்னொரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ்-க்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் வைத்துள்ளார். ஏற்கனவே பும்ரா, ஷமி இல்லாத நிலையில், முகமது சிராஜ் டெஸ்ட் தொடரின் போது பந்துவீச்சாளர்களுக்கு தலைமையேற்று வழிநடத்தினார். சிறப்பாக செயல்பட்ட அவர், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சிராஜ்-க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் அணி வீரர்களான ரஹானே, அஸ்வின், கேஎஸ் பரத், சைனி உள்ளிட்டோருடன் இணைந்து சிராஜும் நாடு திரும்பவுள்ளார். இவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதனால் ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், உனாத்கட், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றனர். ஆனால் சிராஜ்-க்கே இந்திய அணி ஓய்வு வழங்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், உனாத்கட் அல்லது முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதில் ஷர்தில் தாக்கூரை தவிர்த்து வேறு எந்த வீரர்களுக்கும் போதிய சர்வதேச அனுபவம் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவால் அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், உலகக்கோப்பை தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தால் என்னவாகும் என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் பரிசோதனை முயற்சிக்கும் ஒரு எல்லை உண்டு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பரிசோதனை முயற்சி ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் பரிசோதனை என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.