
அயர்லாந்து அதிரடி தொடக்கம்
தொடக்க வீரர்களாக, கேப்டன், வில்லியம் போர்டர்ஃபீல்டும், பவுல் ஸ்டிர்லிங்கும் களமிறங்கினர். கடந்த 4 போட்டிகளிலும், தொடக்க விக்கெட்டுகளை உடனடியாக வீழ்த்திவந்த இந்திய பவுலர்கள், அயர்லாந்து தொடக்க வீரர்களை வீழ்த்த முடியாமல் திணறினார்கள்.

அஸ்வின் கலக்கல்
எனவே, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 15 ஓவர்களில் 89 ரன்களை குவித்தது. அப்போதுதான், இந்தியாவுக்கு முதல் சக்சஸ், அஸ்வின் வாயிலாக கிடைத்தது. பவுல் ஸ்டிர்லிங்க், 42 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வின் பந்தில், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 92 ரன்களாக இருந்தபோது, சுரேஷ் ரெய்னா பந்து வீச்சில், கிளீன் பௌல்ட் ஆகி, 2 ரன்களில் எட் ஜாய்ஸ் நடையை கட்டினார்.

கவுரவ ஸ்கோர்
இருப்பினும் வில்லியம் போர்டர்ஃபீல்டும், நியால் ஓ பிரைனும் இணைந்து, அணியை சரிவில் இருந்து தடுத்தனர். அணியின் ஸ்கோர் 145 ரன்களாக இருந்தபோது, இந்த ஜோடியை மோகித் ஷர்மா பிரித்தார். வில்லியம் போர்டர்ஃபீல்டு 67 ரன்களில் அவுட் ஆனார். ஒருபுறம் அன்டி பல்பிர்னி 24 ரன்களிலும், கெவின் ஓ பிரைன் 1 ரன்னிலும், கேரி வில்சன் 6 ரன்களிலும் நடையை கட்டினாலும், நியால் ஓ பிரைன் விளாசிய 75 ரன்களால் அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.

கடைசி நேரத்தில் இந்தியா கலக்கல்
49வது ஓவரில் அயர்லாந்து அணி, 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 39 ஓவர்களில் 206 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த அயர்லாந்து அணி, கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் முறை
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணியும், 250 ரன்களை கடந்தது இல்லை, ஆனால் அயர்லாந்து அதை சாதித்தது. ஹாமில்டனின் சிறிய மைதானமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.

ஆரம்பமே அசத்தல்
இதனிடையே ரன் வேட்டையை தொடங்கிய, இந்தியாவின் தொடக்க வீரர்கள், ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் அயர்லாந்து பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். குறிப்பாக, ஷிகர்தவானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பிட்சின் குறுக்கே, அங்குமிங்கும், நடமாடி, பவுலர்களை குழப்பிவிட்டு தனது வழக்கமான பாணியில் அடி நொறுக்கினார்.

புது சாதனை
அணியின் ஸ்கோர் 23.2 ஓவர்களில் 174ஆக உயர்ந்தபோது, 64 ரன் எடுத்திருந்த ரோகித், ஸ்டூவர்ட் தாம்ப்சன் பந்து வீச்சில் பௌல்ட் ஆனார். லேட்-கட் வகை ஷாட் அடிக்க முயன்றபோது, பேட்டின் விளிம்பில் பந்து பட்டு, ஸ்டம்பை பதம் பார்த்தது. உலக கோப்பையில், முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் மூலம் 174 ரன்கள் குவித்தது, இந்திய அணிக்கு ஒரு சாதனையாகும்.

தவான் செஞ்சுரி
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவான், செஞ்சுரி அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் அவர் அடிக்கும் 2வது செஞ்சுரி இதுவாகும். இருப்பினும் 85 பந்துகளில் 100 ரன்னில் இருந்தபோது, தாம்ப்சன் பந்தில் வில்லியம் போர்ட்டர்ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கோஹ்லி, ரஹானே ஜோடி
ஆனால், விராட் கோஹ்லியும், ரகானேவும், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், பந்துக்கேற்ப ரன்னை கொண்டு சென்றனர். 36.5 ஓவர்களில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு, வெற்றி இலக்கான 260 ரன்களை தொட்டது. கோஹ்லி, 42 பந்துகளில் 44 ரன்களுடனும், ரஹானே, 28 பந்துகளில் 33 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். வெற்றிக்கான பவுண்டரியை கோஹ்லி, அருமையான ஆப்-டிரைவ் மூலம் அடித்து போட்டியை இனிதே நிறைவடையச் செய்தார்.

தொடர் வெற்றி
இதன்மூலம், நடப்பு உலக கோப்பையில், இந்தியா தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த உலக கோப்பை தொடரில் பெற்ற வெற்றிகளையும் கணக்கில் கொண்டால், இந்தியாவுக்கு இது தொடர்ச்சியான 9வது வெற்றியாகும். ஆட்ட நாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.

பெரிய வெற்றி
எதிரணி 250 ரன்களை தாண்டு குவித்த போட்டியொன்றில், 79 பந்துகள் மிச்சமிருக்கும்போது வெற்றி பெறுவது, உலக கோப்பை தொடர்களில், இந்தியாவுக்கு இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications