பும்ரா, புவி இல்லாத அணி
இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை சேர்க்கவில்லை. அவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் முழுவதுமாக பங்கேற்க வைக்கும் நோக்கில் ஓய்வில் இருக்கின்றனர். கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர்கள் ஆட அதிகம் வாய்ப்புள்ளது. அவர்கள் இருவரும் இல்லாமலேயே இந்தியா வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெல்லும் என்பது தான் இந்திய அணி நிர்வாகத்தின் எண்ணமாக இருந்தது. அந்த எண்ணம் தவறு என்பதை முதல் இரு போட்டிகளும் சுட்டிக் காட்டி விட்டன.
இந்தியாவின் வியூகம் எடுபடவில்லை
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும், நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் சரியாக பந்து வீசவில்லை. முதல் போட்டியில் 2 சுழல், 3 வேகம் என்ற பந்துவீச்சு வியூகத்தை கையில் எடுத்தனர். அது சரியில்லை என இரண்டாவது போட்டியில் 3 சுழல், 2 வேகம் என்ற வியூகத்தை கையில் எடுத்தனர். ஆனால், இரண்டு போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை. இது தான் உண்மை.
இந்திய அணி பந்துவீச்சு எப்படி?
இரண்டு போட்டியிலும் இரு அணிகளுமே 300 ரன்களுக்கும் மேல் எடுத்ததை வைத்து பார்த்தால் இரண்டு போட்டிகளுமே பேட்டிங் பிட்சில் தான் நடந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. அந்த அணியின் ஹெட்மையர், ஹோப் இந்திய அணியை சமாளித்து ரன் குவித்து "டை" வரை எடுத்துச் சென்றனர். இந்திய அணியில் பந்துவீச்சு சரியில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு போட்டிகளிலும் ஒரு அறிமுக பந்துவீச்சாளரை வைத்துக் கொண்டு ஆடியுள்ளனர். அவர்கள் அணியோடு ஒப்பிட்டால் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் போதிய அனுபவம் பெற்றவர்களே.
அதிக ரன்கள் கொடுத்த இந்தியா
முதல் போட்டியில் இந்திய அணியில் ஷமி 10 ஓவர்களில் 81 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். மற்ற இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ் இருவரும் 10 ஓவர்களில் 64 ரன்கள் குவித்தனர். ஜடேஜா 66 ரன்கள் கொடுத்தார். சாஹல் மட்டுமே கட்டுக்கோப்பாக வீசி 41 ரன்கள் மட்டும் கொடுத்தார். இரண்டாவது போட்டியில் உமேஷ் 78 ரன்களும், குல்தீப், சாஹல் 60 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் சரியில்லை என்பதும், அவர்கள் அதிரடி ஷாட்கள் அடிக்கவே முற்படுகிறார்கள் என்பதும் தெரிந்த நிலையில், இந்தியா அவர்களை விரைவில் வெளியேற்ற எந்த திட்டங்களும் வைத்திருக்கவில்லை.
பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இழக்க ஒன்றுமே இல்லை. தோல்வி அவர்களை அதிகம் பாதிக்கப் போவதில்லை. ஆனால், இந்தியா சிறந்த அணி என பெயர் வைத்துக் கொண்டு நிலையில்லாமல் ஆடி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் அதிக காலம் இல்லை. அதற்குள் இந்திய அணி தன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருமா?