மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரின் மனைவி ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், தற்போது 2வது குழந்தையை வரவேற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி பங்கேற்கவுள்ளது. வரும் 22ஆம் தேதி இந்திய அணி பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் இதுவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை.

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா மும்பையிலேயே இருந்து வந்தார். இதற்கான காரணம் குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மாவுடன் அவரின் மனைவி ரித்திகா எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியை காண வந்த போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வந்தது தெரிய வந்தது. இதனால் ரோஹித் சர்மா விடுப்பில் இருக்க வேண்டும் என்று ரசிகர்களே ஆதரவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது மனைவி ரித்திகாவுடன் ரோஹித் சர்மா ஆதரவாக இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் முடிவடைந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
சமைரா என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஐபிஎல் தொடரின் போது மும்பை அணி விளையாடும் போட்டிகளில் ரோஹித் சர்மாவுடன் அதிகமாக சமைரா காணப்படுவார். தற்போது குட்டி ரோஹித் வந்திருப்பதால், அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அண்மையில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கும் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.