மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பள்ளி மாணவராக இருந்த போது ஜாம்பவான் வீரர் ஒருவரை நேரில் பார்ப்பதற்காக கிளாஸை கட்டடித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்பின் சில ஆண்டுகளிலேயே அதே வீரருடன் இந்திய அணியில் பயணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 20 ஆயிரம் ரன்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, படிப்படியாக உயர்ந்து கேப்டனாக முன்னேறியவர். 37 வயதை எட்டினாலும், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் உள்ளது. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று அசத்தலாக விளையாடி வருகிறார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 ரன்களை மட்டுமே சேர்த்து ஏமாற்றினார். ஆனால் ரோஹித் சர்மாவின் ஸ்டைலே அதுதான். நிதானமாக தொடங்கி அடுத்தடுத்து டாய் கியருக்கு செல்வார். அதனால் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் பள்ளி மாணவராக இருந்த போது ரோஹித் சர்மா செய்த சில சேட்டையான சம்பவங்கள் பற்றி தெரிய வந்துள்ளது. ஒருமுறை இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான வீரேந்தர் சேவாக் மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. பள்ளி நாட்களில் ரோஹித் சர்மா, சேவாக்கின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார்.
தொடக்க வீரராக களமிறங்கி சேவாக் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டம் ரோஹித் சர்மாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவே அவர் தொடக்க வீரராக ஜொலிப்பதற்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, சேவாக் பயிற்சியை பார்க்க ரோஹித் சர்மா சில முயற்சிகளை செய்துள்ளார். ஆனால் எதுவும் பலனளிக்காத சூழலில், நேரடியாக கிளாஸை கட்டடித்துவிட்டு வான்கடே மைதானத்திற்கு பறந்துள்ளார்.
அங்கு சேவாக்கை அருகில் நின்று பார்க்க முடிந்ததோடு, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னாட்களில் ரோஹித் சர்மா இந்திய அணியில் சேவாக்குடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவரின் சிறுவயது ஹீரோ சேவாக்கை போலவே தொடக்க வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.