லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் விளாசி சாதனை படைத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ததால், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

கடந்த முறை ரோகித் சர்மா ஓவல் மைதானத்தில் களமிறங்கிய போது சதம் விளாசி இருந்ததால், மீண்டும் அதேபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கம் போல் ரோகித் சர்மாவுக்கு ஷார்ட் பால் திட்டத்துடன் மட்டுமே ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் வீசிய ஷார்ட் பால்களில் ரோகித் சர்மா சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஆனால் திடீரென ஸ்டார்க்கிற்கு 2 ஓவர்களுடன் நிறுத்திய கம்மின்ஸ், 5வது ஓவரிலேயே போலாண்டை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
இதனால் ரோகித் சர்மா நிதானம் காட்டினார். இந்த நிலையில் 6வது ஓவரை வீசிய கம்மின்ஸ் பந்தில் ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஓவல் மைதானமே அமைதியானது. இதனை அப்பீல் செய்யலாமா என்ற கில்லிடம் ஆலோசித்த ரோகித் சர்மா, மேல் முறையீடு செய்யாமலேயே பெவிலியன் திரும்பினார். வழக்கம் போல் முக்கியமான போட்டியில் ரோகித் சர்மா விரைந்து ஆட்டமிழந்துள்ளார். இதனால் இந்திய அணி தடுமாறி வருகிறது.
கேப்டனாக சொதப்பிய ரோகித் சர்மா, பேட்ஸ்மேனாக இந்திய அணியை கரை சேர்ப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.