லண்டன்: கடந்த முறை இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்துள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ள போட்டியில், யார் டெஸ்ட் சாம்பியனாக உருவெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால், இம்முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரிலேயே சொல்லிக் கொள்ளும்படியாக ரோகித் சர்மா ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டும், டெஸ்ட் கிரிக்கெட் வெவ்வேறு என்றாலும், பேட்டிங் ஃபார்ம் அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் பொதுவானதே. இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 6 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ஒரு சதம் உட்பட 240 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் கடந்த முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும், ரோகித் சர்மா தொடக்க வீரராக சதம் விளாசியதோடு 368 ரன்களை குவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடி வரும் சூழலில், ரோகித் சர்மா தொடக்க வீரராக 52.76 சராசரி வைத்துள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் பிரச்சனை இருந்தும், ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் சாதித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை சொல்லி வருகிறார்கள். முக்கியமான போட்டிகளில் பொறுப்புடன் ஆடும் தன்மை கொண்ட ரோகித் சர்மா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று பார்க்கப்படுகிறது.