லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், அந்த மைதானத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய வீரர்களை பற்றி பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவாக லண்டன் ஓவல் மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இரு மாதங்களாக இங்கிலாந்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித் கவுண்டி போட்டிகளில் ஆடி தயாராகி வந்துள்ளார்.

லண்டனில் உள்ள ஓவல் மைதானம் ஆஸ்திரேலியா ஆடுகளத்தை போன்று இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் ஆஸி. அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் சிறப்பாக ஆடிவரும் இந்திய வீரர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக காயத்தால் விலகியுள்ள கேஎல் ராகுல் 2 போட்டிகளில் விளையாடி 249 ரன்களும், விபத்தால் ஓய்வில் உள்ள ரிஷப் பண்ட் 178 ரன்கள் விளாசியுள்ளனர்.
ஓவல் மைதானத்தில் சிறப்பாக ஆடியுள்ள இருவருமே காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 126 ரன்கள் விளாசியதோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார். அபாரமான ஃபார்மில் இருக்கும் ஜடேஜா, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் வலிமையான வீரராக உருவெடுத்துள்ளார்.
அதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கடந்த முறை ஓவல் மைதானத்தில் விளையாடிய போது சதம் விளாசி அசத்தியுள்ளார். 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். மொத்தமாக ஓவல் மைதானத்தில் அடிய ஒரே போட்டியில் 138 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மேஜிக்கை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியில் உள்ள வீரர்களிலேயே ஓவல் மைதானத்தில் அதிக ரன்களை விளாசியுள்ளது விராட் கோலி தான். 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 169 ரன்களை விளாசியுள்ளார். கடந்த முறை ஓவல் மைதானத்தில் ஆடிய போது ஒரு அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாடம் எடுக்கும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அந்த 3 போட்டிகளில் மட்டும் 443 ரன்களை விளாசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய வீரர்கள் களமிறங்குவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.