இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிய ஜூன் 25.. லார்ட்ஸ் மைதானத்தில் மாற்றி எழுதப்பட்ட வரலாறு
மும்பை: 1983 ஜூன் 25 அன்று இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி முதல் தற்போது 15 வயது வைபவ் சூர்யவன்ஷி வரை அனைவரும் கிரிக்கெட் விளையாட காரணமே அந்த நாள் தான். அன்றுதான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் ஜாம்பவான்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட்டின், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதியது.
அன்று லார்ட்ஸில் நடந்த அந்த அற்புதம் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் மாற்றியது. 10 வயது சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கரை அது எப்படி மாற்றியது என்பதை அவரே பின்னாளில் கூறினார்: "அன்று இரவு பெற்றோரின் அனுமதியோடு நள்ளிரவு வரை கொண்டாடினேன். 1983 உலகக் கோப்பை வெற்றிதான் என்னை லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தூண்டியது. அன்று அது நடக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருந்திருக்கும்." சச்சின் என்ற விஸ்வரூபம் பிறக்க அந்த ஒரு நாள் தான் விதையாக அமைந்தது.

வெற்றி பெறுவதற்கு 50க்கு 1 என்ற அளவில் மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாகக் கணிக்கப்பட்ட இந்திய அணி, அன்றைய காலத்தின் அசுர பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை நோக்கி கபில்தேவ் பின்னோக்கி ஓடிப் பிடித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ச், அமர்நாத்தின் ஆட்டநாயகன் ஆட்டம், மைதானத்திற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள்... என அப்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவில் பெரும் கிரிக்கெட் புரட்சியை ஏற்படுத்தும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அன்றைய காலகட்டத்தில் வறுமையும், அவசரநிலையின் வடுக்களும் நிறைந்த ஒரு தேசத்திற்கு கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது நம்பிக்கைக்கான குறியீடாக இருந்தது. குறிப்பாக, ஆங்கிலேயர்களின் அதிகார மையமாகவும், வர்க்க மற்றும் நிறவெறியின் கோட்டையாகவும் கருதப்பட்ட லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வெல்வது என்பது, நம்மை அடிமைப்படுத்தியவர்களின் மீது நாம் பெற்ற தார்மீக வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
இந்தியாவுக்கும் லார்ட்ஸ் மைதானத்திற்குமான உறவு எப்போதுமே ஒருவித உணர்வுப்பூர்வமான போராட்டமாகவே இருந்துள்ளது. 1930ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை நடத்தி ஆங்கிலேயர்களின் அடித்தளத்தை உலுக்கிய போது, இங்கிலாந்து அணி இந்தியா வரவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 1932ல் இந்திய அணி முதன்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. காந்தி சிறையில் இருந்த அந்த நேரத்தில், இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களான துலீப்சின்ஜி மற்றும் பட்டோடி நவாப் ஆகியோர் இந்திய அணிக்கு விளையாடாமல் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக விளையாடினர். இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் முன்னிலையில் நடுக்கத்துடன் களமிறங்கிய இந்திய அணி அன்று தோற்றது.
அதற்கும் 37 ஆண்டுகளுக்கு முன்பு, 1895ல் இந்தியாவின் ரஞ்சித் சிங்ஜியை லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட அன்றைய எம்சிசி தலைவர் லார்ட் ஹாரிஸ் அனுமதிக்கவில்லை. இங்கிலாந்தில் பிறந்தவர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற விதியை அவர் கூறினார். ஆனால், வெஸ்ட் இண்டீஸில் பிறந்த லார்ட் ஹாரிஸ் அப்படிப் பேசியது அப்பட்டமான நிறவெறி என்றே வரலாற்றில் பதிவானது. இத்தகைய அவமானங்களையும், அடிமைத்தனத்தின் பாரத்தையும் சுமந்து கொண்டுதான் இந்திய வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டியிருந்தது.
அதனால்தான் சச்சின், டிராவிட் அல்லது அசாருதீன் என யாராக இருந்தாலும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பதை தங்களது வாழ்நாள் கனவாகக் கருதினர். 1990ல் அசாருதீன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தபோது, ஹைதராபாத்தில் இருந்த அவரது தந்தை போன் செய்து, "லார்ட்ஸில் நீ சதம் அடிக்க வேண்டும் என்று என் மனம் ஏங்கியது" எனக் கூறினார். 2011ல் தனது ஓய்வுக்கு சில மாதங்களுக்கு முன்பு லார்ட்ஸில் சதம் அடித்த ராகுல் டிராவிட், "முன்பு ஒருமுறை இங்கு சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது என் மனதில் ஒரு வடுவாக இருந்தது. இப்போது நிம்மதி அடைகிறேன்" என்றார்.
1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகுதான் இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கம் உலக அரங்கில் ஓங்கத் தொடங்கியது. 1987ல் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா பெற்றது. முதன்முறையாக இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தை விட்டு ஆசிய மண்ணுக்கு நகர்ந்தது.
சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு, 2002ல் நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் அதே லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடியது. இங்கிலாந்து நிர்ணயித்த 326 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. சேவாக், கங்குலி, டிராவிட், சச்சின் என அனைவரும் அவுட்டான நிலையில், 20 வயது யுவராஜ் சிங்கும், 21 வயது முகமது கைஃபும் இணைந்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர்.
வெற்றி பெற்ற அந்த நொடியில், லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்ற கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சட்டையைக் கழற்றி காற்றில் சுழற்றி ஆக்ரோஷமாக கொண்டாடினார். மும்பை வான்கடே மைதானத்தில் பிளின்டாப் செய்த கொண்டாட்டத்திற்கு கங்குலி லார்ட்ஸ் மைதானத்திலேயே பதிலடி கொடுத்தார். 1932ல் இருந்த பயமும் தயக்கமும், 2002ல் கம்பீரமாகவும் ஆக்ரோஷமாகவும் மாறியிருந்தது.
அன்று 1983ல் கபில்தேவ் அந்த உலகக் கோப்பையை ஏந்தாமல் இருந்திருந்தால், சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு சகாப்தம் உருவாகியிருக்குமா? பிசிசிஐ இன்று உலக கிரிக்கெட்டை ஆளும் அசுர பலம் கொண்ட அமைப்பாக மாறி இருக்குமா? ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடர்கள் உருவாகியிருக்குமா? கிரிக்கெட்டின் தலைநகரம் லண்டனில் இருந்து மும்பைக்கு மாறியிருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது. கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிய அந்த ஒரு நாள், என்றும் இந்தியர்களின் நெஞ்சில் அழியாத காவியமாக நிலைத்திருக்கும்.


Click it and Unblock the Notifications
