மும்பை: டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமாகி, 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய ஆந்திர வீரர் வேணுகோபால் ராவ், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
37 வயது வேணுகோபால் ராவ், 121 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2017க்கு பிறகு எம்ஆர்எப் நிறுவனத்துக்காக கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 2005ல் இந்திய அணிக்குத் தேர்வாவதற்கு முன்பு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 501 ரன்களை விரட்டியபோது 228 ரன்கள் அடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அப்போது முதல் தர கிரிக்கெட்டில் 5வது அதிக சேசிங் ஸ்கோராகும். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல், இவருடைய ஆட்டத்தை கவனித்து தேர்வுக் குழுவினரிடம் பரிந்துரை செய்ததால் இந்திய அணியில் ராவ் நுழைந்தார்.
16 ஒருநாள் ஆட்டங்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். கடைசியாக 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடினார். எனினும் முதல் தர கிரிக்கெட்டில் 2017 வரை விளையாடினார். ஆந்திர ரஞ்சி கோப்பை கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
2009ல் ஐபிஎல் போட்டியை டெக்கான் சார்ஜர்ஸ் வென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தார் ராவ். 2014ல் கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார். ஓய்வுப் பிறகு தொலைக் காட்சி வர்ணனையாளராகத் தொடர்ந்து ஈடுபடவுள்ளார்.