லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 8வது முறையாக வெற்றிக்கு அருகில் வந்து இந்திய அணியை கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை நடத்தப்பட்டுள்ள இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, இருமுறை தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி தொடர்களில் 10 ஆண்டுகளாக இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது தெரிய வந்துள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி, 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியிடம் அரையிறுதியில் தோல்வி, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அண்யிடம் தோல்வி, 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் தோல்வி, 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
அதேபோல் 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி, 2021 டி20 உலகக்கோப்பையில் குரூப் சுற்றிலேயே தோல்வி, 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் அரையிறுதி தோல்வி, தற்போது ஆஸ்திரேலிய அணியிடம் மீண்டும் தோல்வி என்று இந்திய அணி அடி வாங்காத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனால் இந்திய அணியே சர்வதேச கிரிக்கெட்டின் "சோக்கர்ஸ்" என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடும் இந்திய பேட்ஸ்மேன்கள், முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி தோல்வியடைந்த அனைத்து ஐசிசி தொடரிலும் ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.