பெங்களூரு: 4 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிளம்பியது.
மேற்கு இந்திய தீவுகளில், இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ல் ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. போட்டித்தொடர், ஆகஸ்ட் 22ல் தொடர் நிறைவு பெறுகிறது.

முதல் டெஸ்டுக்கு முன்பாக 2 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா, விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. நேற்று வரை 6 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.
இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் நடைபெற்று வந்தது. பயிற்சி முகாம் முடிந்து மேற்கு இந்திய தீவுகள் புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோஹ்லி கூறியதாவது:
ஒரு டெஸ்ட் அணியாக எங்களின் திறமையை எடை போடுவதற்கான சரியான தருணம் இது. வரும் மாதங்களில் எங்களின் செயல்பாடு, அடுத்து வரும் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடப் போகிறோம் என்பதை நிர்ணயிப்பதாக இருக்கும்.
தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே பொறுப்பேற்றுள்ளது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. இந்திய அணிக்காக பல வெற்றிகளை வசப்படுத்தியவர் அவர். உள்நாட்டிலும், வெளிநாட்டு மைதானங்களிலும் எப்படி வெற்றி பெறுவது என்பதை அவர் மிக நன்றாக அறிவார். அவரது அனுபவம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும். அவர் காயம் அடைந்தால் மட்டுமே லோகேஷ் ராகுலை களமிறக்குவது பற்றி பரிசீலிப்போம். இவ்வாறு கோஹ்லி கூறினார்.
இந்திய வீரர்கள் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விருத்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ஷர்துல் தாக்கூர்.