மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அதிவேக பந்துவீச்சாளராக இருந்தவர் உம்ரான் மாலிக். சில போட்டிகளில் மட்டுமே ஆடிய அவர் தற்போது வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார். அவருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என்ற கேள்வி உள்ளது. அது குறித்த உண்மையை உடைத்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர் ஃபராஸ் மம்ப்ரே.
2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார் உம்ரான் மாலிக். மேலும் அவர் அதிவேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 150 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசியதோடு 14 போட்டிகளில் 22 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து அவருக்கு இந்திய டி20 அணி மற்றும் ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அவர் 10 ஒரு நாள் போட்டிகளில் 13 விக்கெட்களும், 8 டி20 போட்டிகளில் 11 விக்கெட்களும் வீழ்த்தினார். மொத்தமாக 18 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இடையே இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்திய அணிக்காக அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார்.
இது நல்ல செயல்பாடாக காட்சியளித்தாலும், அவர் ஒவ்வொரு ஓவருக்கும் அதிக ரன்களை விட்டு கொடுத்து வந்தார். டி20 போட்டிகளில் அவரது எகானமி 10.48 ஆக உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் அவரது எகானமி 6.54 ஆக உள்ளது. அவர் அதிவேகத்தில் பந்து வீசினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். இந்த காரணத்தால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது மேலும் ஒரு தகவலை முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் ஃபராஸ் மம்ப்ரே பகிர்ந்து உள்ளார். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடித்தார். அவர் அதிக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கவில்லை. எனினும், அவரது ஐபிஎல் செயல்பாட்டை வைத்து இந்திய அணிக்கு தேர்வு செய்தது பிசிசிஐ.
அதன் பின் அவருக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என நினைத்து அவரை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுமாறு கூறியதாக ஃபராஸ் மம்ப்ரே உண்மையை உடைத்து இருக்கிறார். தற்போது உம்ரான் மாலிக் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால், அதில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்த உண்மையை அவர் உடைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் ஃபராஸ் மம்ப்ரே பேசுகையில், "அதிக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத பந்து வீச்சாளர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் உம்ரான் மாலிக். அவர் ஐபிஎல்-லில் இருந்து அதிரடியாக இந்திய அணிக்கு நுழைந்தார். டி20 போட்டியில் ஒரு போட்டிக்கு 24 பந்துகள் மட்டுமே வீச முடியும். சில சமயம் அந்த 24 பந்துகளையும் முழுமையாக வீச முடியாமல் போகலாம். டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் அழுத்தம் அந்த 24 பந்துகளில் உங்களுக்கு இருக்காது. எனவே, டி20 போட்டிகளை மட்டுமே வைத்து ஒரு வீரரின் திறமையை நாம் அடையாளம் காண முடியாது என நான் நினைக்கிறேன்." என்றார்.
மேலும், "அவர் ரஞ்சி ட்ராபி மற்றும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நாங்கள் உறுதி செய்தோம். அவர் ஒரு உள்ளூர் தொடரில் முழுமையாக விளையாடி முடித்தால் அவரது பந்துவீச்சு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். டெஸ்ட் போட்டிகளின் பல்வேறு சமயங்களில் உடலளவில் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். சில சமயம் ஆறு பகுதிகளுக்கு மைதானத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே தாக்கத்துடன் ஆட்டத்தின் கடைசி பகுதியில் பந்து வீச வேண்டிய நிலை ஏற்படும். அப்போது உடல் அளவிலும், மனதளவிலும் உங்களுக்கு சவால் விடுக்கப்படும். நீங்கள் அந்த நடைமுறையை எல்லாம் கடந்து வர வேண்டும்." என்றார் ஃபராஸ் மம்ப்ரே.