மும்பை: 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
2024 டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் நடைபெற்றது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணியின் குரூப் சுற்றுப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றன. அதில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூயார்க் நகர மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது. சூப்பர் 8 சுற்றிலும் அனைத்துப் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அபார வெற்றியைப் பெற்றது.
பின்னர் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. தென்னாப்பிரிக்கா அணி பல ஆண்டுகளாக ஐ.சி.சி. (ICC) தொடர்களில் கோப்பை வெல்லாத அணியாகவும், அழுத்தமான போட்டிகளின் போது தோல்வியடையும் அணி என்ற பெயரையும் பெற்று இருந்ததால், இந்த இறுதிப் போட்டியில் விளையாடிய போது இயல்பாகவே அழுத்தத்துக்கு ஆளானது.
மறுபுறம், இந்திய அணி 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு அடுத்த மீண்டும் ஒரு இறுதிப் போட்டியில் விளையாடியதால், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தது.
இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்களும், அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்களும், சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்களும் எடுத்திருந்தனர். எட்டக்கூடிய இந்த இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, ஒரு கட்டத்தில் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களை விட அதிக பந்துகளுடன் ஆடி வந்தது. அப்போது 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது தென்னாப்பிரிக்கா.
அதிரடி ஆட்டக்காரர்களான ஹென்றிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் களத்தில் இருந்தனர். கிளாசென் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். அதனால் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், அதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா பந்து வீசினர். 16வது ஓவரில் பும்ரா 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 17வது ஓவரின் முதல் பந்தில் கிளாசென் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அந்த ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போதும் கூட தென்னாப்பிரிக்கா அணி 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எட்டக்கூடிய இலக்குடன் தான் இருந்தது.
அடுத்து 18வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மார்கோ ஜான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்தது. அந்த அணி கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
அப்போது 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். என்ன நடக்குமோ என அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர். ஏனெனில், 3 பவுண்டரிகள் அடித்தாலும் தென்னாப்பிரிக்கா வசம் போட்டி மாறிவிடும் என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், தென்னாப்பிரிக்கா அணி முதல் பந்திலேயே டேவிட் மில்லர் விக்கெட்டை இழந்தது. அப்போதே தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை உடைந்தது. ஏனெனில் அப்போது ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்ய இருந்தனர். ரபாடா இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தாலும், அதன் பிறகு அந்த அணியால் அதிக ரன்களை சேர்க்க முடியவில்லை. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதை அடுத்து, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2007 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தப் போட்டி நடந்து அதற்குள் ஓராண்டாகிவிட்டதா என ரசிகர்கள் தங்களால் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து உள்ளனர்.