மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மவுனம் கலைத்துள்ளார்.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் இடம்பிடித்தவர் சஞ்சு சாம்சன். அப்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், வாய்ப்பு கிடைக்காமலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் சுமார் 8 ஆண்டுகளாக இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார்.

இந்த 8 ஆண்டுகளில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக 24 டி20 போட்டிகள் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதிலும் டி20 போட்டிகளில் முக்கியமான அணிகளுக்கு எதிராக தேர்வு செய்யப்படாமல், சுமாரான அணிகளுக்கு எதிராகவே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சஞ்சு சாம்சன் இந்திய ஒருநாள் அணிகளில் இருந்து வந்தார். உலகக்கோப்பை தொடர் நெருங்கிய சூழலில், சஞ்சு சாம்சனுக்கு சில வாய்ப்புகள் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் கடைசியாக ஆடிய ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவை பேக் செய்துவிட்டு, சஞ்சு சாம்சனை மாற்று வீரராகவே மட்டுமே தேர்வு செய்தது இந்திய அணி. ஆனால் ராகுல் ஃபிட்னஸை எட்டிய பின், வீட்டிற்கு அனுப்பப்பட்டார் சஞ்சு சாம்சன்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக்கோப்பை அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரரான சஞ்சு சாம்சனை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலேயே தயார் செய்திருக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்திய அணியோ வித்தியாசமாக சஞ்சு சாம்சனை கழற்றிவிட்டு திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்துள்ளது. இதனால் விரக்தியடைந்த சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடுத்த இலக்கை நோக்கி முன்னேற விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். விரக்தியடைந்த சஞ்சு சாம்சன், இன்ஸ்டாகிராமில் தனது சோகத்தை பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே சோகத்த்தை ஏற்படுத்தியுள்ளது.