மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மீரட் நகரில் பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கி காயம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் ஒரு காலத்தில் இந்திய அணியின் சிறந்த ஸ்விங் வேகப்பந்து வீச்சாளராக விளங்கினார்.
இந்தியாவுக்காக ஆறு டெஸ்ட், 68 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடிய பிரவீன் குமார் 119 ஐபிஎல் போட்டிகளிலும் களம் இறங்கி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிரவீன்குமார் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில் பிரவீன் குமார் தற்போது கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். நேற்று தனது மகனுடன் காரில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்புறத்தில் வந்த லாரி பயங்கரமாக காரில் மோதியது. இதில் கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருந்தது. எனினும் சிறு காயங்களுடன் பிரவீன் குமாரும் அவருடைய மகனும் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து பேசி உள்ள பிரவீன்குமார் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் கடவுளின் ஆசியால் தப்பித்து உங்களுடன் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய உறவினர் ஒருவரை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் இரவு ஒன்பது முப்பது மணி போல் வந்து கொண்டிருந்தபோது ஒரு மிகப்பெரிய லாரி எங்கள் கார் மீது மோதியது.
என்னுடைய கார் கொஞ்சம் பெரியது என்பதால் நாங்கள் தப்பித்தோம். இல்லையெனில் படு காயங்கள் அடைந்து இருப்போம். முதலில் காரின் பம்பர் தான் உடைந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கார் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதில் நாங்கள் பிழைத்ததே கடவுளின் கருணை தான் என்று பிரவீன் குமார் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ரிஷப்பன்ட் கார் விபத்தில் சிக்கி பிழைத்த நிலையில் தற்போது பிரவீன்குமாரும் கார் விபத்தில் சிக்கி இருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.