ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் அஜிங்கியா ரஹானே வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே விமர்சனங்களை அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 87*, ரோகித் சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, ஜடேஜா 36* ரன்களும் எடுத்துள்ளனர். இதனால் 2வது நாள் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானேவின் மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு இடைவேளை வரை இந்திய அணியின் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி விக்கெட் கொடுக்காமல் ஆடியது. ஆனால் உணவு இடைவேளைக்கு பின் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா சீரான இடைவேளையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணியை மீட்கும் பணி விராட் கோலி - ரஹானேவின் கைகளுக்கு வந்தது.
ஆனால் ரஹானே வெறும் 8 ரன்களில் கேப்ரியல் பந்தில் போல்டாகி வெளியேறினார். இன்சைட் எட்ஜாகி போல்டாகிய நிலையில், அந்த ஸ்டம்ப் சில அடிகள் பறந்து சென்று விழுந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது 8 ரன்களில் ஆட்டமிழந்திருப்பதால், மீண்டும் ரஹானே வேலையை காட்ட தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
18 மாதங்களுக்கு பின் கம்பேக் கொடுத்த ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து உடனடியாக அவருக்கு துணை கேப்டன்சி கொடுக்கப்பட்டது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வழங்கப்பட்ட இரு வாய்ப்புகளிலும் சொதப்பியுள்ளார். இதனால் ரஹானே இடத்தில் ருதுராஜ் கெய்க்வாடை அறிமுகம் செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.