மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று ரோகித் சர்மா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக தென்னாபிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ், கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "மற்ற கேப்டன்களின் வெற்றி சதவீதத்தையும், ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்."

"ரோகித் சர்மா கிட்டத்தட்ட 74 சதவீத போட்டிகளை வெற்றி பெற்று இருக்கிறார். இது மற்ற கேப்டன்களை விட மிகவும் அதிகம். ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடினால் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சிறந்த கேப்டன் என்ற பெயரை அவர் பெறுவார். ரோகித் சர்மா ஏற்கனவே தாம் ஓய்வு பெற போவதில்லை என்பது குறித்து திட்டவட்டமாக கூறிவிட்டார்."
" எதற்காக அவர் ஓய்வு பெற வேண்டும். அவர் கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 83 பந்துகள் எதிர் கொண்டு 76 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. அவர் போட்ட அடித்தளத்தால் தான் இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது."
"அதுவும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் ரோகித் சர்மா எப்படி அதிரடியை காட்டி இருந்தார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு பெற வேண்டும் என்ற ஒரு காரணமே கிடையாது. அவருடைய ரெக்கார்டே அவர் குறித்து பேசும். ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் தொடக்கத்தையே மாற்றிவிட்டார்.
முதலில் ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் பவர் பிளேவில் குறைவாக இருந்தது."
"ஆனால் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 115 என்ற அளவில் பவர் பிளே கட்டத்தில் உயர்ந்தது. இதுதான் நல்ல வீரர்களுக்கும் மிக சிறந்த வீரர்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். தனிப்பட்ட முறையில் நமது விளையாட்டை மெருகேற்றிக் கொண்டு இருக்க வேண்டும். அது முடிவுக்கு வராது. சில விஷயங்களை நாம் எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்."
" எப்போதும் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். இந்திய ரசிகர்களாக நீங்கள் ரோகித் சர்மாவை நினைத்து பெருமை கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் பல சவால்களை சந்தித்து தான் வந்திருக்கிறார். ஒரு வீரரின் ஃபார்ம் என்பது ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். ஆனால் பெரிய போட்டிகளில் அவர்கள் தான் அணியை முன்னின்று நடத்துவார்கள்" என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.