அட போங்கய்யா.. இப்படி பண்ணலாமா?.. முகத்தை மூடிக்கொண்டு கத்திய பும்ரா.. என்ன நடந்தது?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச் விட்டது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

எப்படி
இந்த நிலையில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் இந்தியா இரண்டு விக்கெட்டை இழந்த 98 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை.

மோசம்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கேட்ச் விட்டது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளில் மொத்தமாக 10 கேட்ச்களை இந்திய அணி வீரர்கள் விட்டுள்ளனர்.

கேட்ச்
ஸ்மித் தொடங்கி வில் புக்கோவஸ்கி வரை முக்கியமான வீரர்களின் கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையவே வீரர்கள் கேட்ச் விட்டதுதான் காரணம் ஆகும். இன்று நடந்த போட்டியிலும் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் கேட்ச் விட்டனர்.

கிரீன்
கேமரூன் கிரீன் விக்கெட், டிம் பெயின் விக்கெட் என்று இன்றும் முக்கியமான வீரர்களின் கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். ரஹானே ஸ்லிப்பில் ஒரு கேட்ச் விட்டது பெரிய சர்ச்சையானது. பும்ரா ஓவரில் விஹாரி ஒரு கேட்ச் விட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது.

பும்ரா
அதிலும் பும்ரா ஓவரில்தான் இன்று பல கேட்ச்கள் மிஸ்ஸானது. பொதுவாக களத்தில் கோவம் அடையாத பும்ரா முகத்தை மூடிக்கொண்டு கஷ்டப்படும் அளவிற்கு இன்று களத்தில் நிலைமை கைமீறி போனது. கேட்ச்கள் மூலம்தான் மேட்ச்களை வெல்ல முடியும். ஆனால் இந்திய அணி வீரர்களில் ஜடேஜா போன்ற சிலரை தவிர வேறு யாரும் சரியாக பீல்டிங் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications