மும்பை : இந்தியா அணிக்கு தலைமை பயிற்சியாளராக வர வேண்டி சன்னி லியோன், நரேந்திர மோடி, அமித் ஷா போன்றோர் பெயர்களில் விண்ணப்பம் வந்துள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் ஒன்றும் உள்ளது. அவை அனைத்துமே சிலரால் போலியாக அனுப்பப்பட்டு உள்ளன.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் பெரும் நாள் மே 27 அன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன? என பிசிசிஐ அதிகாரிகளிடம் கேட்ட போது மிரள வைக்கும் தகவல் ஒன்றை கூறினார் அவர். சுமார் 3,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை போலி கணக்குகளின் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் எனவும் கூறினார்.

கடந்த 2022இல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் பெற்ற போதும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது இமெயில் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போதும் இதே போல ஆயிரக்கணக்கான போலி முகவரிகளிலிருந்து பல்வேறு பிரபலங்களின் பெயர்களில் விண்ணப்பம் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் இந்த முறை விண்ணப்ப படிவங்களை சரி பார்க்கும் முறையை எளிதாக்கும் வகையில் கூகுள் பார்ம்ஸ் பயன்படுத்தப்பட்டது. அது அனைவராலும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியது என்பதால் இந்த முறையும் சுமார் 3,000-க்கும் அதிகமான போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதில் மிகவும் வேடிக்கையாக பாலிவுட் நடிகைகளான சன்னி லியோன். ப்ரீத்தி ஜிந்தா, ஷாரூக் கான் ஆகியோரது பெயர்களில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே போல கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தது போல சிலர் போலி விண்ணப்பங்களை தயாரித்து அனுப்பி உள்ளனர்.
இந்த போலி விண்ணப்பங்களால் பிசிசிஐக்கு எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த விண்ணப்பம் பெறும் முறையே ஒரு கண்துடைப்பு நாடகம்தான். கடந்த முறையும் ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் என முடிவு செய்த பின் ஒரு கடமைக்காக பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. தாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்கிறோம் என காட்டிக் கொள்ளவே பிசிசிஐ விண்ணப்பம் பெற்றது.
இந்திய கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்த தோனி, கம்பீர், யுவராஜ்.. மறக்க முடியாத உலகக்கோப்பை
அதே போல இந்த முறையும் சில பயிற்சியாளர்களை நேரில் பிசிசிஐ தொடர்பு கொண்டது. அதன் முடிவில் கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த விண்ணப்பப் படிவங்கள் பெறும் முறை என்பது ஒரு கண்துடைப்பு நாடகமே. எப்படியும் கவுதம் கம்பீர் அல்லது ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்ட ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார். வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவை இல்லை என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ, கவுதம் கம்பீரை தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கம்பீர் இந்த பதவியை ஏற்க ஒப்புக் கொண்டாரா? என்பதே ஒரே கேள்வியாக உள்ளது.