மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனது திருமண எண்ணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தான் ஒரு பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி இருக்கிறார். இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் நடிகைகளை தான் திருமணம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா, செர்பிய மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக்-கை திருமணம் செய்து கொண்டார். கே எல் ராகுல், ஓரிரு ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள ஆதியா ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆதியா, பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் டேட்டிங் சென்ற கதைகளையும் நாம் அறிவோம். இந்த நிலையில், 29 வயது ஆகும் குல்தீப் யாதவ் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் திட்டவட்டமாக நடிகையுடன் திருமணம் இல்லை என கூறினார். இதுபற்றி அவர் பேசுகையில், "விரைவில் திருமணம் குறித்த நல்ல செய்தியை கூறுவேன். ஆனால், நிச்சயமாக அது ஒரு நடிகை அல்ல. நான் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் என்னையும், எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் நபராக இருப்பது முக்கியம்" என்றார்.
குல்தீப் யாதவ் சமீபத்தில் நடந்த 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக செயல்பட்டார். உலகக் கோப்பை வென்று சாதனை படைத்துள்ள நிலையில் குல்தீப் யாதவ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் சுழற் பந்துவீச்சில் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் வரிசையில் குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டி கடுமையாக உழைத்து வருகிறார்.
பவுண்டரி லைன் நகர்ந்ததுக்கு காரணம் கோலி தான்.. சூர்யகுமார் கேட்ச்சில் வெளியான உண்மை.. வீடியோ
அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படாதது மட்டுமே ஒரு குறையாக உள்ளது. தற்போது அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்; 103 ஒருநாள் போட்டிகளில் 168 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்; 40 சர்வதேச டி20 போட்டிகளில் 69 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தற்சமயம் இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.