மும்பை : கிரிக்கெட் உலகில் பேட்டிங் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு அவர்கள் இருவருமே இல்லை என வேறு ஒரு பேட்ஸ்மேன் பெயரை கூறி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான்.
ஜுனைத் கான் சொன்ன அந்த வீரரும் இந்திய வீரர் என்பது தான் இதில் ஆச்சரியம். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். அதே போல சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் சச்சினை விட அதிக சதம் அடித்த வீரர் விராட் கோலி.

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் இந்திய அணிக்கு எதிராக ஆறு ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் ஆடி இருக்கிறார். விராட் கோலி இவர் பந்துவீச்சில் மூன்று போட்டிகளில் 24 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முறையும் இவர் பந்திலேயே ஆட்டமிழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு விராட் கோலியை ஆட்டிப் படைத்த ஒரு வேகப் பந்துவீச்சாளர்.
இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் கோலோச்சி இருக்கின்றனர். அவர்கள் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என ஒரு பேட்டியில் ஜுனைத் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் - "நான் ரோஹித் சர்மா என சொல்கிறேன். அவர் பேட்டிங் செய்யும் அணுகுமுறை காரணமாக அனைத்து மாதிரியான ஷாட்களும் உள்ளன. விராட் பெரிய வீரர். ஆனால், சச்சின் வேறு ஒரு காலத்தில் ஆடிக் கொண்டு இருந்தார் இன்று அவர் ஆடினால் 100 சதத்துக்கும் மேல் அடித்து இருப்பார்." என்றார் ஜுனைத் கான்.
மேலும், "எல்லோரும் ரோஹித்தை ஹிட்மேன் என அழைக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் அதிரடியாக 264 ரன்கள் குவித்தது தான். அவர் மூன்று இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். அது மிகவும் அரிய விஷயம். காரணம், அதை அவர் ஒரு முறைக்கும் மேல் செய்துள்ளார். அவர் அதிக சிக்ஸர்களையும் அடித்து இருக்கிறார். அதனால் தான் நான் ரோஹித் சர்மாவை சிறந்த பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்கிறேன்" என்றார் ஜுனைத் கான்.