மும்பை : ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக வருவதில் மேலும் ஒரு சிக்கலாக ரவீந்திர ஜடேஜா வந்துள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியே இருந்தார். அதனால், டி20 அணிக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வீரர் அணியின் கேப்டனாக செயல்பட்டனர். இதன் முடிவில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையில் களம் காணும் என்ற தகவல்கள் சில மாதங்கள் முன்பு வரை இருந்தது.

ஆனால், பாண்டியா காயத்தால் சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் ரோஹித் சர்மா ஒரு வீரராக மட்டுமே அணியில் செயல்படுவார். வேறு ஒருவரை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமிக்கும் எனவும் சில தகவல்கள் உள்ளன.
இந்த நிலையில், பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்தால் அவர் கேப்டனாக வருவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சில வாரங்கள் முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். இடையே தென்னாப்பிரிக்கா தொடரில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு சூர்யகுமார் கடைசி டி20யின் போது காயத்தால் விலகிய போது கேப்டனாக செயல்பட்டார்.
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா அணியில் தவிர்க்க முடியாத ஆல் - ரவுண்டர் மற்றும் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பின் மூத்த வீரர். மறுபுறம் பாண்டியா நல்ல ஆல் - ரவுண்டர் என்ற போதும் அடிக்கடி காயத்தில் சிக்கி விடுகிறார். ஆனால், ஜடேஜா தன் கிரிக்கெட் வாழ்வில் காயத்தால் விலகிய நாட்கள் மிகவும் குறைவு.
இந்த காரணங்களால் ரோஹித் சர்மா டி20 அணியின் கேப்டனாக விரும்பவில்லை என்றாலோ, அல்லது அவருக்கு பின்போ சூர்யகுமார் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வருவார்கள் என கூறப்படுகிறது. அதிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது அரசியல் செல்வாக்கும் உள்ளது. எனவே, அவரைத் தாண்டி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் ஆவது சற்று கடினமே.