மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த முடிவு, தனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா, கடந்த 2024-ல் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் , 2025-ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகிய நிலையில், ஒருநாள் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருநாள் அணியின் முழுநேர கேப்டனாக நீடித்து வந்தார். அவரது தலைமையில் கடைசியாக ஆடிய போது இந்திய ஒருநாள் அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இருந்தது.

தற்போது அந்தச் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங், சுப்மன் கில்லுக்கு இது ஒரு புதிய சவால் என்றாலும், ரோஹித் வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
"ஒருநாள் அணியையும் வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். இதற்கு முன்பு அவர் இதைச் செய்ததில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சாதனையைக் கொண்டுள்ள ரோஹித், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ரோஹித் கேப்டனாக இல்லாமல், ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்" என்று ஹர்பஜன் கூறினார்.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த ஒரு கேப்டனை, அடுத்த தொடரிலேயே பதவியிலிருந்து நீக்குவது சரியல்ல என்று ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் இந்த ஆஸ்திரேலியா தொடருக்காவது ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் வலுவாக வாதிட்டார்.
"ஒருவேளை அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால், மீண்டும் கேப்டனாகத்தான் செல்வார் என்று நான் நினைத்தேன். அவர் சமீபத்தில்தான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர். எனவே, குறைந்தபட்சம் இந்த ஒரு தொடருக்காவது அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று ஹர்பஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், 2027 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய காலம் இருப்பதாகவும், சுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்க இன்னும் சிறிது காலம் காத்திருந்திருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
"நீங்கள் 2027 உலகக்கோப்பையைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், அது இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஒருவேளை இன்னும் 6 அல்லது 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கூட அவர் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே நேரத்தில், ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது" என்று ஹர்பஜன் சிங் மீண்டும் குறிப்பிட்டார்.