லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானே சிக்சருடன் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இவரின் அரைசதம் காரணமாக இந்திய அணி 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணியால் ஃபாலோ ஆனை கூட தவிர்க்க முடியாது என்று ரசிகர்கள் நம்பிக்கையை கைவிட்டனர். ஆனால் களத்தில் களத்தில் ரஹானே இருந்ததால், 3ஆம் நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏனென்றால் 18 மாதங்களுக்கு பின், இன்னும் சொல்லப் போனால் 512 நாட்களுக்கு பின் ரஹானே இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடிய ஒரு சில இந்திய வீரர்களில் ரஹானே முக்கியமான வீரர். இதுவரை ரஹானே சதம் விளாசி இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்தது இல்லை. இதனால் மெல்போர்னில் ஆடிய ஆட்டம் மீண்டும் ரஹானே ஒரு ஆட்டத்தை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தின் 3வது பந்திலேயே பரத் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஷர்துல் தாக்கூர் - ரஹானே கூட்டணி சேர்ந்தது. ஷர்துல் தாக்கூர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரஹானேவுக்கு கம்பெனி கொடுத்தார். மறுபக்கம் ரஹானே தேவையான நேரத்தில் பவுண்டரியை விளாசி ரன்களை சேர்த்தார். ஷர்துல் தாக்கூர் கம்மின்ஸை எதிர்கொள்ள கஷ்டப்பட்டாலும் போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய ரஹானே சிக்சருடன் அரைசதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே அடிக்கும் 26வது அரைசதமாகும். அரைசதம் அடித்த ரஹானே பேட்டை உயர்த்த கூட மறந்து நின்றார். ஷர்துல் தாக்கூர் நினைவுப்படுத்தியதை அடுத்து பேட்டை உயர்த்தி நன்றி கூறினார். ரஹானே - தாக்கூர் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.