கான்பூர்: பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்கிய அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் புவனேஷ்வர் குமார். இந்திய அணிக்காக 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளையும், 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளையும், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பிரதான பவுலராக இருந்தவர்.

ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் புவனேஷ்வர் குமார் மொத்தமாக இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அதன்பின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற டி20 லீக் தொடர்களில் விளையாடி இளம் வீரர்களை வழிநடத்தி வந்தார். இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் புவனேஷ்வர் குமார் மீண்டும் ரஞ்சி டிராபி பக்கம் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பெங்கால் - உத்தரப் பிரதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி பவுலிங்கை தேர்வு செய்தார். பெங்கால் அணியின் முகமது கைஃப், இஷான் போரெல் மற்றும் சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் ஆகியோரின் வேகத்தில் உத்தரப் பிரதேச அணி வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் முதல் இன்னிங்ஸில் பலமான முன்னிலையை பெறும் முனைப்புடன் பெங்கால் அணி களமிறங்கியது. சவுரவ் பால் - கோஷ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்த சவுரவ் பால் மற்றும் சுதீப் குமார் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வந்த மஜும்தார் 13 ரன்களிலும், கேப்டன் மனோஜ் திவாரி 3 ரன்களிலும், அபிஷேக் போரெல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் சேர்த்தது. இந்த 5 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் வீழ்த்தி அசத்தியுள்ளார். 6 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது பலவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.