மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் வென்ற பின் ரோகித் சர்மா தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
2021, ஜனவரி 19.. இதே நாளில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. டிசம்பர் 19ஆம் தேதி இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. அப்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அனைவரும் ஒரே குரலில் இந்திய அணி 4-0 என்று டெஸ்ட் தொடரை இழக்கும் என்று கணிப்பை மகிழ்ச்சியாக வெளியிட்டனர்.

ஆனால் விராட் கோலி இல்லாமல், ஒரே மாதத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையில் இந்திய அணி 2-1 என்ற டெஸ்ட் தொடரை வென்றது. 32 ஆண்டுகளாக யாராலும் தகர்க்க முடியாத காபா கோட்டையை தகர்த்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றது. விராட் கோலி, பும்ரா, அஸ்வின், முகமது ஷமி, ஜடேஜா என்று யாரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி வென்றது இன்று வரை யாராலும் மறக்க முடியாத கதை தான்.
அந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் ரிஷப் பண்ட். 3வது டெஸ்ட் போட்டியிலேயே நேதன் லயனை பொளந்து கட்டிய ரிஷப் பண்ட், 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்தார். எந்த ஆஸ்திரேலிய பவுலர் பந்துவீசினாலும் அசராமல் களத்தில் நின்று இலக்கை நோக்கி பயணித்தார். புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் என்று அத்தனை வீரர்கள் ஆட்டமிழந்தாலும், ஒருமுனையில் நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ரிஷப் பண்ட்.
அந்த வெற்றியை இந்திய நாடே கொண்டாடிய போது, வின்னிங் ஷாட்டை அடித்துவிட்டு சாதாரணமாக கைகுலுக்கி நடந்து வந்தார் ரிஷப் பண்ட். இந்த வெற்றி நிமிடங்கள் குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், முதல்முறையாக 2018ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். அப்போது இந்திய அணிக்குள் வரும் போது விராட் கோலி கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் வெளிநாடுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அதற்கான செயல் திட்டங்களில் தீவிரமாக இருந்தனர்.
உலகின் தலைசிறந்த அணியாக இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டனர். அந்த வகையில் காபா டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, வெற்றிக்கு பின் நான் பெரிதாக கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. அப்போது என்னை நோக்கி வந்த ரோகித் சர்மா, நீ என்ன செய்திருக்கிறாய் என்பது புரியவில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இந்த வெற்றியின் முக்கியத்துவம் பற்றி புரியும் என்று கூறினார். அப்போது தான், எனக்கு ஏதோ சாதனை படைத்துள்ளோம் என்று புரிந்தது என்று கூறியுள்ளார்.