லண்டன்: ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்த புகைப்படத்தை பகிர்ந்து இந்திய வீரர் சுப்மன் கில் தனது ஆதங்கத்தை சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றிபெற 280 ரன்களும், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 7 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதனிடையே 4ஆம் நாள் ஆட்டத்தின் போது சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேமரூன் க்ரீன் சரியாக பிடித்ததாக 3வது நடுவர் அவுட் கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேமரூன் க்ரீன் அந்த கேட்சை சரியாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் 3வது நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோவை விளாசி வருகின்றனர்.

ஏனென்றால் பந்தின் ஒரு பக்கத்தை பிடித்துள்ள கேமரூன் க்ரீன், பந்தின் இன்னொரு பக்கம் தரையில் ஒட்டி இருப்பதை அறியவில்லை. அவர் அவுட் என்று கோரியது தவறில்லை என்றாலும், அதனை கவனித்து மூன்றாவது நடுவர் சரியான முடிவை எடுத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், அந்த கேட்சை ஜூம் செய்து கூட 3வது நடுவர் பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஒருபக்கம் ரசிகர்கள் என்றால், இன்னொரு பக்கம் சுப்மன் கில்லே நேரடியாக நடுவரின் முடிவை விமர்சித்துள்ளார். 4வது நாள் முடிவடைந்த பின் கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்த புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் நேரடியாகவே சுப்மன் கில் விமர்சித்துள்ளார். நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில், தலையில் அடித்துக் கொள்வது போன்ற எமோஜிக்களையும் சுப்மன் கில் பதிவிட்டுள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த கேட்சிற்கு அவுட் கொடுத்த நடுவரின் முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்து விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.