என்னய்யா இது.. முதல் பவுண்டரிக்கு 81 பந்துகளா.. விராட் கோலி செய்த அலப்பறை.. கொண்டாட்டம் வேற!
டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, தனது முதல் பவுண்டரியை அடிக்க 81 பந்துகள் எடுத்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் விளாசினர்.

இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளதோடு, 162 ரன்களும் முன்னிலை பெற்றுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வலுவான நிலையில் உள்ளது. இதனிடையே விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யமும் இருந்துள்ளது. வழக்கமாக விராட் கோலி தனது கிளாஸிக் ஷாட்டான கவர் டிரைவ் பவுண்டரியை ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே விளாசிவிடுவார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரன்களை சேர்க்க தவறவிட மாட்டார். ஆனால் நேற்றைய நாளின் ஆட்டத்தில் விராட் கோலி தனது முதல் பவுண்டரியை விளாசுவதற்காக மட்டும் 80 பந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார். 80 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, 81வது பந்தில் கவர் திசையில் பவுண்டரியை விளாசினார். இதனால் உற்சாகமடைந்த விராட் கோலி, இந்திய அணி வீரர்கள் இருந்த ஓய்வறையை பார்த்து கைகளை தூக்கி கொண்டாட்டத்தில் வேறு ஈடுபட்டார்.
இதனை பார்த்த இந்திய அணி ரசிகர்களோ, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற புதிய யுக்தியை பின்பற்றி வருகிறது. ஆனால் இந்திய வீரர்கள் மரபு ரீதியான டெஸ்ட் ஆட்டத்தை கைவிடாமல் ஆடி வருகின்றனர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானமாக ஆடிய இந்திய அணி வெறும் 232 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதனால் 3ஆம் நாள் ஆட்டத்தை ரன்ரேட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications