மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகும் வகையில் அடிலெய்ட் பயிற்சி முகாமில் ஈடுபட்டது. இந்த பயிற்சி முகாமை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி செய்த போது வெறும் 70 பேர் தான் வந்து பார்த்தார்கள். ஆனால் இந்திய அணி பயிற்சி செய்யும் போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வந்தனர். அது மட்டுமில்லாமல் இந்திய வீரர்களை தொந்தரவு செய்யும் வகையில் சில ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக ஒரு ரசிகர்கள் ரோகித் சர்மாவையும் ரிஷப் பண்டையும் உடல் பருமனாக இருப்பதை குறி வைத்து கிண்டல் செய்து இருக்கிறார். மேலும் பல ரசிகர்கள் தங்களிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார்கள். இதனால் வீரர்கள் ஒழுங்காக பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அது மட்டும் இல்லாமல் சில ரசிகர்கள் இந்திய வீரர்கள் விளையாடுவதை பேஸ்புக் மூலம் நேரலை செய்திருக்கிறார்கள். இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதை கமெண்ட் அடித்தும் தொடர்ந்து கிண்டல் செய்தும் வந்ததால், வீரர்கள் பாதியிலே தங்களது பயிற்சி முகாமை முடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால் கடுப்பான பிசிசிஐ இனி எந்த ஒரு பயிற்சி முகாமையும் ரசிகர்கள் வந்து பார்க்க அனுமதி வழங்கப் போவதில்லை என்று கூறி இருக்கிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. இதனை அடுத்து இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதை பார்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் ஊடகங்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பயிற்சி முகாமை கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.விராட் கோலி,கில்,ரோகித் சர்மா, பண்ட் ஆகியோர் விளையாடும் போது பலரும் அங்குத் திரண்டு சொல்ல முடியாத இன்னல்களை வீரர்களுக்கு தந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் தான் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.