பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக புறப்பட்ட இந்திய வீரர்கள், விடிய விடிய ஏர்போர்ட்டிலேயே காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. மழையால் 5வது நாள் ஆட்டம் ரத்தான நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் உடனடியாக ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

ட்ரினிடாட்டில் இருந்து பார்படாஸ் செல்வதற்கான விமானம் இரவு 11 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இதன் காரணமாக ஹோட்டலில் இருந்து இரவு 8.30 மணியளவில் புறப்பட்ட இந்திய வீரர்கள், அடுத்த சில மணி நேரங்களிலேயே விமான நிலையத்தை அடைந்துள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி விமானம் 11 மணியளவில் புறப்படவில்லை. இதனால் நீண்ட நேரம் இந்திய வீரர்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்துள்ளனர்.
3 மணி வரையும் விமானம் புறப்படாததால், இந்திய வீரர்கள் தூக்கமில்லாமல் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வழியாக நள்ளிரவு 3 மணிக்கு பின் புறப்பட்ட விமானம், அதிகாலை 5 மணியளவில் பார்படாஸில் தரையிறங்கியுள்ளது. இதனால் நீண்ட நேரத்திற்கு பின் ஹோட்டலுக்கு சென்ற இந்திய வீரர்கள் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர்.
டெஸ்ட் போட்டிக்கு பின் வீரர்களுக்கு ஓய்வு தேவை என்பதால், ஒருநாள் தொடருக்கான முதல் நாள் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த இந்திய அணி நிர்வாகிகள், உடனடியாக பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ஒவ்வொரு போட்டிக்கு இடையிலும் போதுமான ஓய்வு தேவை என்பதால், இரவு நேரங்களில் விமான பயணத்தை தவிர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ நிர்வாகம், அடுத்தடுத்த தொடர்களில் இரவு நேர பயணம் இல்லாமல் திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பின் 2 நாட்களில் இடைவெளியில் இந்திய அணி ஒருநாள் தொடரில் களமிறங்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் அதிலும் ஒருநாள் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.