பாலக்கலே: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையை 2019 உலகக்கோப்பைக்கு முன், 2019 உலகக்கோப்பைக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஜடேஜா தனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளார்.

அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். அதற்கு ஜடேஜாவின் பேட்டிங்கே முக்கிய காரணம். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் முன்னேற, இந்திய அணி நிரந்தர வீரர்களில் ஜடேஜாவும் ஒருவராக மாறினார். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஜடேஜா கவனம் செலுத்தி வந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் நெருங்கியதால் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஜடேஜா ஆடிய 22 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஜடேஜாவின் பவுலிங் ஃபார்ம் குறித்து ரசிகர்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஜடேஜாவை இந்திய அணியில் சேர்ப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேபாள அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் ஜடேஜா தனது பவுலிங் ஃபார்மை நிரூபித்துள்ளார். ஜடேஜா 2வது ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தப் போட்டியில் 10 ஓவர்களை வீசிய ஜடேஜா வெறும் 40 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஜடேஜா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.