மும்பை: இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி கவனமாக செயல்பட வேண்டும் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா எச்சரித்து இருக்கிறார். மேலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வங்கதேச தொடருக்கு முன் நடக்கும் துலீப் டிராபி தொடரில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்தும் கூறி இருக்கிறார் ரெய்னா.
இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19 முதல் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதற்கு அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், உள்ளூர் அளவில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை அடையாளம் காணும் வகையிலும் துலீப் டிராபி டெஸ்ட் தொடரை பிசிசிஐ நடத்த உள்ளது. இதற்கு முன் துலீப் ட்ராபி தொடருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத நிலையில், தற்போது இந்திய அணிக்கான டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்யும் மேடையாக இந்த தொடரை மாற்றியமைத்து உள்ளது பிசிசிஐ.
தற்போது நான்கு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய டெஸ்ட் அணி வீரர்களோடு, உள்ளூர் அளவில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களும் இதில் பங்கேற்று உள்ளனர். அது குறித்து சுரேஷ் ரெய்னா பாராட்டி பேசி இருக்கிறார். அதே சமயம், இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்காதது குறித்தும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி சுரேஷ் ரெய்னா பேசுகையில், "துலீப் டிராபி தொடரின் காரணமாக டெஸ்ட்டில் ஒரு முழுமையான அணி உருவாகும். துலீப் டிராபியில் நட்சத்திர வீரர்கள் பங்கேற்பது என்பது பிசிசிஐயின் சிறந்த முன்னெடுப்பாகும். நீங்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் (டெஸ்ட்) விளையாடுவதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்." என்றார்.
மேலும், "வங்கதேசத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் சிறந்த சுழற் பந்து வீச்சு தாக்குதல் உள்ளது. சில வீரர்கள் நீண்ட காலமாகவே சிறப்பாக ஆடி வருகிறார்கள். இந்தத் தொடர் ஆஸ்திரேலிய தொடருக்கு மிகச் சிறந்த பயிற்சி களமாக அமையும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா துலீப் டிராபி தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி எந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. நீங்கள் பெரிய தொடருக்கு செல்லும் முன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். மீண்டும் அணி ஒன்று கூடும் போது எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுவதும் அவர்களுக்கு அவசியம் தான்." இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.