டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 80 ரன்களுடன் தொடங்கியது. பின்னர் ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பேட்டிங்கை தொடர்ந்தனர். சர்வதேச கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்த, இன்னொரு பக்கம் ரோகித் சர்மா 10வது சதத்தை விளாசினார்.

இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை கடந்து சென்றது. ஒரு கட்டத்தில் இவர்களின் விக்கெட்டை வீழ்த்துவது எப்படி என்று தெரியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் திணறிய போது. அறிமுகம் வீர்ர அதனேஸ் ரோகித் சர்மாவை 103 ரன்கள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து சுப்மன் கில் களமிறங்கி 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வழக்கம் போல் விராட் கோலி களமிறங்கி 4 ரன்கள் எடுத்திருந்த போது தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.
இதன் பின்னர் வந்த ஜெய்ஸ்வால் - விராட் கோலி கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது. என்ன செய்தாலும் விக்கெட்டை மட்டும் கொடுக்க மாட்டோம் என்று இருவரும் பிடிவாதமாக இருந்தனர். இதனால் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளதோடு, 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள சூழலில் இந்திய அணி வெற்றிபெறுவது நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது. அது இன்னிங்ஸ் வெற்றியாக அமையுமா என்பது மட்டுமே கேள்வியாக உள்ளது. அதேபோல் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 செஷன்களை முழுமையாக ஆடிவிட்டு, கடைசி செஷனுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜெய்ஸ்வால் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.