மும்பை: ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து கே எல் ராகுல் ஒரு சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்து இருந்தார். அப்போது கிளம்பிய எதிர்வினைகளால் தனது தன்னம்பிக்கை உடைந்து போய் விட்டதாகவும், இப்போது தன்னால் சிறிய கூட்டத்துக்கு முன்பு கூட தன்னம்பிக்கையுடன் அமர முடியவில்லை எனவும், பள்ளியில் கூட தனக்கு தண்டனை கொடுத்ததில்லை, ஆனால் பிசிசிஐ தனக்கு தடை விதித்ததாக வேதனை பொங்க கூறி இருக்கிறார் கே எல் ராகுல்.
2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது இந்திய அணி. அதற்கு முன் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் நடத்தும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் கரன் ஜோகர் சர்ச்சைக்குரிய கேள்விகளை தொடர்ந்து கேட்டார்.

ஹர்திக் பாண்டியா எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள், தன் பெற்றோரிடம் அவர்களை எப்படி அறிமுகம் செய்வேன், அவர்களுடன் உறவு கொண்டதை பற்றி எல்லாம் எப்படி சொல்வேன் என்பது குறித்தும் சர்ச்சைக்குரிய பல பதில்களை கூறி இருந்தார். கே எல் ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றாலும் ஹார்த்திக் பாண்டியா பேச்சால் எழுந்த எதிர்ப்பில் அவரது பெயரும் சிக்கியது.
இந்திய அளவில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் மீது ரசிகர்கள் கடும் கோபம் கொண்டனர். நிலைமையை சமாளிக்க வேண்டி பிசிசிஐ அவர்கள் இருவரையும் தற்காலிகமாக தடை செய்தது. அதனால், அவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த சம்பவம் ராகுல் கிரிக்கெட் வாழ்வில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
அது குறித்து அவர் தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். "அந்தப் பேட்டி (காபி வித் கரன்) முற்றிலும் வேறு ஒரு உலகத்தை சார்ந்திருந்தது. அது என்னை முற்றிலுமாக மாற்றி விட்டது. நான் அமைதியாக பேசி வளர்ந்தவன். இந்திய அணிக்காக விளையாடி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்தேன். நான் 100 பேர் இருக்கும் ஒரு அறையில் கூட தன்னம்பிக்கையுடன் இருப்பேன். ஆனால், இப்போது என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அந்த பேட்டி என்னை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது." என்றார் கே எல் ராகுல்.
மேலும், "நான் இந்திய அணியில் இருந்து தடை செய்யப்பட்டேன். எனது பள்ளியில் கூட தண்டனை பெற்றதோ, தடை செய்யப்பட்டதோ இல்லை. அதனால், அதை எப்படி கையாள்வது என எனக்கு தெரியவில்லை. நான் பள்ளிகளில் சில சில்மிஷங்களை செய்து இருக்கிறேன். ஆனால், பள்ளியை விட்டு நீக்கும் அளவுக்கோ, எனது பெற்றோரை அழைத்து வரும் அளவுக்கோ நான் நடந்து கொண்டதில்லை." இவ்வாறு கே எல் ராகுல் கூறி இருக்கிறார்.