பிர்மிங்காம் : இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி தவிர்த்து மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணி 90-களில் சச்சினை மட்டுமே நம்பியிருந்தது. தற்போதும் அது போல ஒற்றை நட்சத்திர பேட்ஸ்மனின் பின் இந்திய அணி செல்கிறதோ என நினைக்கும் வகையில் இருக்கிறது, இந்திய அணியின் செயல்பாடு.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்பு, இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேன்கள் ஆடும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்பது பெரிய விவாதமாக இருந்தது. புஜாரா பார்மில் இல்லை, வெளிநாட்டில் அதிக ரன் குவிக்கவில்லை, கவுன்டி போட்டிகளில் ஆடிய போது ரன் குவிக்கவில்லை என பல காரணம் கூறி ஒதுக்கப்பட்டார். இப்படி ஆயிரம் காரணம் சொல்லி வெளியே உட்கார வைக்கப்பட்ட புஜாரா எதற்காக உத்தேச அணியில் சேர்க்கப்பட்டார் என்பதே தெரியவில்லை. இவர் தனித்துவம் வாய்ந்த வீரர். தற்போது டி20 கிரிக்கெட் யுகத்தில், டிராவிட் போல பொறுத்திருந்து ஆடும் கலையை பின்பற்றி ஆடுபவர்.

அதே போல, முதல் மூன்று போட்டிகளுக்கான உத்தேச அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 100, முதல் ஒருநாள் போட்டியில் 137 ரன்கள் என சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மண்ணில் அளித்துள்ளார். முதல் டெஸ்ட் தோல்விக்கு பின், தற்போது இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அழுத்தத்தை தர ஆரம்பித்துள்ளார்கள்.
இன்னொரு புறம் சுத்தமாக பார்மில் இல்லாத ரகானே அணியில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் ஆடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு அரைசதம் தான் அடித்துள்ளார்.
கே.எல்.ராகுலுக்கு, இளம் வீரர் என்ற வகையில் வாய்ப்பு கொடுத்ததை வரவேற்கலாம். ஆனால், யாருடைய இடத்தை இவருக்கு அளித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். புஜாரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தனித்துவம் வாய்ந்த முறையில் ஆடி வருபவர்கள். அவர்கள் இடத்தை நிரப்பும் வகையில் ராகுலுக்கு வாய்ப்பளிக்கபட்டால் அது சரியா? என்பதை யோசிக்க வேண்டும்.
அடுத்த போட்டியில் வென்று தங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய அணி, நிச்சயம் வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தவான் மற்றும் ரகானே-வை விடுத்து, அவர்களுக்கு பதில் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.