தள்ளிப் போன வெஸ்ட் இண்டீஸ் தொடர் அணித் தேர்வு.. அஸ்வின், இஷாந்த் தான் காரணம்
மும்பை : இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறது. அது முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட இருந்ததாக செய்திகள் வந்தன. எனினும், நேற்று அணி தேர்வு நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
அணி தேர்வாளர்களில் பலர் வேறு இடங்களில் இருப்பதால், நேற்று கூட்டம் நடைபெறவில்லை. மேலும், இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் வரும் 29ஆம் தேதி உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

அஸ்வின், இஷாந்த் காயம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின், இஷாந்த் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதில் அஸ்வின் காயத்தோடு நான்காம் டெஸ்டில் ஆடினார். அதனால், காயம் மேலும் பெரிதாகிவிட்டது. இஷாந்த் சர்மாவும் காயமடைந்தார் என கூறப்படுகிறது.

உடற்தகுதி தேர்வு
இவர்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றால், எளிதாக இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள். ஒருவேளை இவர்களில் ஒருவர் இடம் பெறாவிட்டாலும், தேர்வாளர்கள் நல்ல மாற்று பந்துவீச்சாளரை தேர்வு செய்ய வேண்டும்.

தவான் தான் பிரச்சனை
இந்த தேர்வில் ஷிகர் தவான் தான் முக்கிய விவாதப் பொருளாக இருப்பார். அவர் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆடுகளங்களில் தடுமாறுவதும், ஆசிய கண்ட ஆடுகளங்களில் ரன் குவிப்பதுமாக இருக்கிறார். எனவே இவரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்தால், அது இந்திய அணியின் அடுத்த சுற்றுப் பயணமான ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுமா? அப்போது இவரை அணியில் எடுப்பதா? இல்லையா? என்ற குழப்பமே முதல் விவாதமாக இருக்கும்.

தவான் இடம் யாருக்கு?
ஒருவேளை தவான் இடம் பெறாவிட்டால் அவர் இடத்தை யார் பிடிப்பார்கள்? ராகுல் நிச்சயம் மற்றொரு துவக்க வீரராக இருப்பார். மற்றொரு இடத்திற்கு புதிய வீரர்களான ப்ரித்வி ஷா அல்லது மாயன்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடிக்கலாம். ஆனால், முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில வாரங்களில் இங்கிலாந்து கவுன்டி அணியில் இணைந்து அரைசதம், சதம் என அடித்து தன் பார்மை நிரூபித்துள்ளார். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications