மும்பை: 2011ஆம் ஆண்டு சச்சினுக்காக எப்படி நாங்கள் உலகக்கோப்பையை வென்றோமோ, அதேபோல் இம்முறை விராட் கோலிக்காக இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மும்பையில் நடந்து வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஐசிசி நிர்வாகத் தலைவர் ஜியோஃப் அலார்டைஸ், பிசிசிஐ ஜெயலாளர் ஜெய் ஷா, இந்திய ஜாம்பவான் சேவாக், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், 2011ஆம் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் தொடக்க வீரருமான சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2011ஆம் ஆண்டு கடைசி உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையை இந்திய வீரர்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கருக்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தோம்.
தற்போது சச்சினின் இடத்தில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலிக்காக அனைவரும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். விராட் கோலியும் சச்சினை போலவே இருக்கிறார். சச்சினை போலவே பேட்டிங் செய்கிறார், சச்சினை போலவே பேசுகிறார், கிரிக்கெட்டையும் சச்சினை போல பார்க்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டுக்காக விராட் கோலி செய்துள்ள செயல்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. மற்ற வீரர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்தவர். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் விராட் கோலி களமிறங்கும் போது தன்னால் முடிந்த அத்தனையையும் அணிக்காக செய்பவர். இந்த உலகக்கோப்பைத் தொடருக்காக நிச்சயம் அவர் ஆர்வமாக இருப்பார். இம்முறை மக்கள் விராட் கோலிக்கு அதிகளவில் ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.