மும்பை: ஜிம்பாப்வே டூரை இந்தியா ரத்து செய்வதாக வெளியான செய்திகளுக்குப் பின்னணியில் தற்போது ஜிம்பாப்வே டூருக்கான அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 29ம் தேதி இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது.
இருப்பினும் கேப்டன் டோணி, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் அணியில் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. சுரேஷ் ரெய்னா அல்லது வேறு யாருடைய தலைமையிலாவது இந்திய அணி ஜிம்பாப்வே செல்லும் என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே செல்லும் என்று ஏற்கனவே திட்டமிட்டப்பட்டுள்ளது. இருப்பினும் டிவி ஒளிபரப்பு உரிமை தொடர்பாக பிசிசிஐ அதிருப்தி அடைந்ததால், இந்த தொடர் நடைபெறாது என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அணியை தேர்வு செய்யுமாறு தேர்வாளர்களுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து ஜூன் 29ம் தேதி அணித் தேர்வு நடைபெறவுள்ளது.
இருப்பினும் மூத்த வீரர்களான டோணி, கோஹ்லி போன்றோர் இந்த தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வு தரப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் ஆடி வருகிறது. இதனால் வீரர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வடைந்துள்ளனர். வங்கதேச டூரிலோ அரசியலும் கூடச் சேர்ந்து அணியை குளறுபடியாகி விட்டது. எனவே சீனியர் வீரர்கள் ஓய்வளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் ஜிம்பாப்வே திட்டம் இதுதான். 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி 20 போட்டிகளில் அது ஆடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 10ம் தேதி நடைபெறும். 12ம் தேதி 2வது ஒரு நாள் போட்டி, 14ம் தேதி மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெறும்.
ஜூலை 17ம் தேதி முதல் டுவென்டி 20 போட்டியும், 19ம் தேதி 2வது டுவென்டி 20 போட்டியும் நடைபெறும்.