சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மூன்று கட்டங்களாக இங்கிலாந்து அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புஜாரா மட்டுமே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனமாக உள்ளார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் சில போட்டிகளில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் அழுத்தம் யாருக்கும் ஒரு போட்டியில் கூட ஓய்வு வழங்கப்படவில்லை. இதனால் பிசிசிஐ தரப்பில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி ஆட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களை 3 கட்டமாக இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர். மே 22ஆம் தேதியுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகாத அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் முதல் கட்டமாக இங்கிலாந்து புறப்பட உள்ளனர். இதையடுத்து குவாலிஃபயர் 2வது போட்டி முடிவடைந்த பின், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாத அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இதையடுத்து மூன்றாம் கட்டமாக மே 30ஆம் தேதி மீதமுள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் சில பயிற்சி போட்டிகளுக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.