பெங்களூரு: ஆடவர் அணிகளைப் போலவே, மகளிர் உலகக் கோப்பை டி 20 போட்டியும் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
பெங்களூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியில் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உலகக் கோப்பையில் இதுவரை 2 முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ள இந்திய அணி, கடந்த இரு உலகக் கோப்பைகளில் குரூப் சுற்றைக் கூடத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
மகளிர் உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
"ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும், "பி" பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.