டப்ளின்: இந்திய அணியின் இளம் இடதுகை வீரரான திலக் வர்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தங்களின் அசாதாரண ஆட்டத்தால் கவனம் ஈர்த்த வீரர்களில் முக்கியமானவர் திலக் வர்மா. கடந்த சீசனின் முதல் பாதியில் மும்பை அணியின் பேட்டிங்கை தனியாளாக தோளில் சுமந்தார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டை சிக்சருடன் தொடங்கிய திலக் வர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தமாக 173 ரன்கள் விளாசினார். அதேபோல் பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் திலக் வர்மா இந்திய அணியின் எதிர்காலத்திற்கான வீரராக பார்க்கப்பட்டார். ஆனால் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் திலக் வர்மாவை ஆசியக் கோப்பைக்கான அணியில் சேர்க்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், திலக் வர்மாவை சேர்க்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தினர். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் களமிறங்கிய திலக் வர்மா, முதல் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் திலக் வர்மாவுக்கு பல்வேறு முனைகளில் இருந்து அறிவுரைகள் குவிந்தன.
இரண்டாவது டி20 போட்டியில் மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், சொதப்பலான ஆட்டத்தையே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், களம் புகுந்த திலக் வர்மா 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நாளை ஆசியக் கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும் சூழலில், திலக் வர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.