பெர்த்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தற்போதைய முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆட விடாமல் ஓய்வு தர இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியா அடுத்து இங்கிலாந்துடன் ஜனவரி 30ம் தேதி விளையாடவுள்ளது. அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு அது தகுதி பெறும். இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாலும் கூட ரோஹித் சர்மா எஞ்சியுள்ள போட்டிகளில் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் போட்டியில் ரோஹித் சர்மா 138 ரன்களைக் குவித்தார். அப்போட்டியில்தான் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
அடுத்த 3 வாரத்தில் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கவுள்ளதால் தொடர்ந்து ரோஹித்தை ஆட வைத்து ரிஸ்க் எடுக்க இந்திய அணி விரும்பவில்லையாம். எனவேதான் அவருக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ரோஹித்துக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு வார ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்.
தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சுத்தமாக பார்மில் இல்லை. எனவே ரோஹித்தையும் விளையாட வைத்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதால்தான் உலகக் கோப்பையை மனதில் கொண்டு தற்போது அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 10ம் தேதி ஆப்கானிஸ்தானுடனும் இந்தியா உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் ஆடவுள்ளது. அப்போட்டிகள் ரோஹித்துக்கு நல்ல பயிற்சி ஆட்டமாகவும், பிட்னஸை சோதித்துப் பார்க்கும் ஆட்டமாகவும் அமையும். அதுவரை அவர் ஓய்வில் இருப்பார்.