லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இன்று கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலைப்பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்தத் தொடருக்காக இரு அணி வீரர்களும் லண்டனில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆடுகளம் அபாயகரமாக இருப்பதாக ஏற்கனவே தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியிருந்தார்.

பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருப்பதால் எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள திணறுவதாகவும் சிலர் கையில் அடிபட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .இந்த நிலையில் இன்று இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா கையில் பந்து ஒன்று தாக்கி இருக்கிறது. இதனால் வலியில் துடித்த ரோகித் சர்மா பயிற்சியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து இந்திய அணியின் மருத்துவக் குழு ரோகித் சர்மாவை ஆய்வு செய்தது. அதில் காயம் பெரிய அளவில் இல்லை என்று தெரிகிறது.முதலில் ரோஹித் சர்மா ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அந்த அளவுக்கு பெரிய காயம் இல்லை என்றும் லேசான அடி தான் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பிசிசிஐ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஒருவேளை ரோகித் சர்மாவின் காயம் அதிகமாக இருந்து அவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், இங்கிலாந்துக்கு கூடுதல் வீரராக சென்றுள்ள ஜெய்ஸ்வால் ரோகித் சர்மாவின் இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஜெய்ஸ்வால் ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் எல்லாம் அடித்திருக்கிறார். இதனால் அவர் நல்ல மாற்று வீரராக இருப்பார். எனினும் ரோகித் சர்மாவின் அனுபவத்தையும் கேப்டன்சியையும் இந்திய அணி மிஸ் செய்ய கூடும். ஆனால் அந்த அளவுக்கு பயப்பட ஏதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.