டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி நேற்று தங்களது தீர்ப்பை வெளியிட்டது.
அந்த தீர்ப்பில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:
ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர ராமனுக்கு சூதாட்டத்தில் தொடர்புள்ளதா என்பது தொடர் ஆய்வுக்கு உட்பட்டது. விசாரணை முடிந்ததும் அதுபற்றி தெரிவிக்கப்படும்.

சூதாட்டம் (Article 2.2.1 and 2.2.2 of the Anti Corruption Code), பிசிசிஐ அமைப்பின் மாண்பை குலைத்தது, விளையாட்டின் ஸ்பிரிட்டை கெடுத்தது ஆகிய பிரிவுகளின்கீழ், குருநாத் மெய்யப்பன் தண்டனைக்குறியவராகும்.
40 வயதிலுள்ள குருநாத் மெய்யப்பன் தெரியாமல் தவறு செய்திருக்க முடியாது. விளையாட்டின் மீது உண்மையான வெறி கொண்ட ஒரு நபரால் பெட்டிங்கில் ஈடுபட முடியாது.
எனவே, குருநாத் மெய்யப்பனுக்கு பின்வரும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 1) கிரிக்கெட் விளையாட்டு தொடர்பானவற்றில் பங்கேற்கும் தகுதியை அடுத்த 5 வருடங்களுக்கு குருநாத் மெய்யப்பன் இழக்கிறார். ஆர்டிக்கிள், 2.2.1 பிரிவில் இத்தண்டனை உறுதியாகிறது.
2) கிரிக்கெட் நடத்தை விதிமுறைகள் ஆர்டிகிள் 2.4 மற்றும் 7.5, லெவல்-4 விதியின்கீழ் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, குருநாத் மெய்யப்பனுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது.
3) நடைமுறை விதிகள், பிரிவு 6, ரூல் 4.2(b) கீழ், எந்தவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் குருநாத் மெய்யப்பன் ஈடுபட முடியாது.
மேற்கண்ட தண்டனைகள், இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டியவை.
ஊழல் தடுப்பு விதிமுறை, ஆர்டிகிள் 2.2.1-ன்கீழ், ராஜ்குந்த்ரா, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
கிரிக்கெட் நடத்தை விதிமுறைகள் ஆர்டிகிள் 2.4 மற்றும் 7.5, லெவல்-4 விதியின்கீழ் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, ராஜ்குந்த்ராவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது.
பிசிசிஐ தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ராஜ்குந்த்ரா ஈடுபடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது. செக்ஷன் 6, ரூல் 4.2 (b) விதிமுறைகளின்கீழ் இது உறுதி செய்யப்படுகிறது.
மேற்கண்ட தண்டனைகள், இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டியவை.
சுப்ரீம்கோர்ட்டில் பதிவான ஆதாரங்கள் அடிப்படையில், நடைமுறை விதிகள், செக்ஷன் 6, விதிமுறை 4.2(c)ன் கீழ் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் தொடரில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு எந்த அணியின் உரிமையாளராகவும் இருக்க முடியாது என்று உத்தரவிடுகிறோம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது.
ஜெய்ப்பூர் ஐபிஎல் கிரிக்கெட் லிமிட்டட் (ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்) நிறுவனம் நடைமுறை விதிகள், செக்ஷன் 6, விதிமுறை 4.2(c)ன் கீழ் ஐபிஎல் தொடரில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு எந்த அணியின் உரிமையாளராகவும் இருக்க முடியாது என்று உத்தரவிடுகிறோம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது.
ராஜஸ்தான் அணியின் பங்குகளை மார்ச் மாதத்தில் ராஜ்குந்த்ரா திரும்ப கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், அது மிகவும் தாமதமானது. ராஜ்குந்த்ரா இங்கிலாந்தில் வசிப்பதால், இந்தியாவில் கிரிக்கெட் பெட்டிங் சட்ட விரோதமானது என்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கது இல்லை.
தனிநபர்கள், தனி அமைப்புகளைவிட, கிரிக்கெட் பெரியது. எனவே, தனி வீரர்கள், அணி உரிமையாளர்கள் நஷ்டம் அடைவார்கள் என்பததை தவறுகளுக்கு தண்டனை தரும்போது சாக்குபோக்காக சொல்ல முடியாது. விளையாட்டின் புனித தன்மையே இங்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கபட வேண்டியது.