சென்னையில் இன்று 'ராமர்' யுவராஜ் - 'ராவணர்' டோணி சந்திப்பு.. ஆவலில் ரசிகர்கள்!
சென்னை: மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் சந்தித்து கொண்டபோது.. என்ற டயலாக்தான் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது. காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணியும், டெல்லியின் காஸ்ட்லி வீரர் யுவராஜ்சிங்கும், இன்று ஐபிஎல் போட்டியின் மூலம் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
டோணி பற்றி யுவராஜ் தந்தை சகட்டுமேனிக்கு திட்டிய நிலையில், இன்றுதான் இரு வீரர்களும் சந்திக்க உள்ளனர் என்பதால் ஆட்டம் ரசிகர்களிடம் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

யுவராஜுக்கு கல்தா
கடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ்சிங் அதன்பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. 2011 உலக கோப்பை தொடர் நாயகனான யுவராஜ்சிங், நடந்து முடிந்த உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்படாதது அவரது ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.

தந்தை பகீர்
இதனிடையே யுவராஜை அணியில் இருந்து கழற்றிவிட்டதில், டோணிக்கு பங்குள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், இரு தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், டோணியை ராவணன் போன்ற ஆணவக்காரர், பிச்சைதான் எடுப்பார் என்றெல்லாம், சகட்டு மேனிக்கு திட்டினார் யுவராஜின் தந்தை யோக்ராஜ்சிங்.

முதல் முறை சந்திப்பு
இந்நிலையில், டோணி தலைமையிலான சிஎஸ்கே அணியும், யுவராஜ்சிங் ஆடும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், இன்று ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியில் சந்திக்க உள்ளன. அப்போது, டோணியும், யுவராஜும், இந்த சர்ச்சைகளுக்கு பிறகு முதல் முறையாக சந்திக்க உள்ளனர்.

ராமர், ராவணர்
அகங்காரம் மிகுந்தவர் ராவணர் என்றால், அதிகாரத்தை தந்தைக்காக விட்டுக்கொடுத்தவர் ராமர் என்கிறது ராமாயண காப்பியம். யோக்ராஜ் சொன்னபடி பார்த்தால், டோணி ராவணர் என்றால், கிரிக்கெட் அணியில் தனது இடத்தை பறிகொடுத்த யுவராஜ்சிங் ராமர்தானே..எனவே சென்னையில் இன்று ராமரும், ராவணரும்தான் சந்திக்க உள்ளனர் அல்லவா.

ஆக்ரோஷமாகுமா, ஆரோக்கியமாகுமா
இவர்கள் சந்திப்பு ஆக்ரோஷமாக இருக்குமா, இல்லை பழைய நண்பர்கள் சந்தித்ததை போல அன்பு நிறைந்ததாக
இருக்குமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தந்தையாகியுள்ள டோணிக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக யுவராஜ்சிங் கூறியது நினைவு கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications