ஐ.பி.எல். 2015: மில்லர் மிரட்டல் வீண்-பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஹைதராபாத்!
ஹைதராபாத்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய லீக் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது.
8வது ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி வார்னர்-தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 6.1 ஓவரில் 56 ரன்களாக இருந்த போது தவான் அவுட் ஆனார். அவர் 18 பந்தில் 4 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார்.

வார்னர் அரைசதம்
2-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் ஹென்றிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு மோர்கன் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய வார்னர் அரை சதம் அடித்தார்.

185 ரன்கள்
மோர்கன் அதிரடியாக விளையாடி 7 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். வார்னர் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஹைதராபாத் அணி 17.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்திருந்து. அதன்பின் வந்த லோகேஷ் ராகுல், கர்ண் சர்மா விரைவாக ரன் எடுக்க ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுத்தது.

மிரட்டிய மில்லர்
வலுவான ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளித்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான விஜய்யும், வோராவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தாலும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்தனர். அதன் பிறகு வந்த மேக்ஸ்வேல் மற்றும் பெய்லி இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஹைதராபாத் எளிதாக வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மில்லர் சிக்சர்களாக பறக்கவிட்டார்.

செம டென்ஷன் கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 28 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இஷாந் சர்மா வீசிய அந்த ஒவரில் 3 சிக்சர்கள் அடித்தும் 22 ரன்கள் மில்லரால் எடுக்க முடிந்தது.
இதனால் 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications