ஐ.பி.எல்.2015: ராஜஸ்தானுக்கு மும்பை அணி பதிலடி கொடுத்தது! 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!!
மும்பை: 8வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சந்தித்தன. ராஜஸ்தான் அணியில் ஜேம்ஸ் பவுல்க்னெர், பிரவீன் தாம்பே நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தெரோன், அங்கித் ஷர்மா வாய்ப்பு பெற்றனர்.
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்த்தீவ் பட்டேல் 23 ரன்களையும் சிமோன்ஸ் 38 ரன்களையும் எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர்.

மந்தமான ஆட்டம்
பின்னர் வந்த உன்முக் சந்த் 13 ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களிலும் நடையைக் கட்டி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

பொல்லார்ட்- ராயுடு ஜோடி
இதன் பின்னர் பொல்லார்ட்டும், அம்பத்தி ராயுடுவும் இணைந்து ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். இறுதிக் கட்டத்தில் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அம்பத்தி ராயுடு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 11-வது அரைசதத்தை கடந்ததுடன் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டவும் வழிவகுத்தார். கடைசி ஓவரில் 14 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்த பொல்லார்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

187 ரன்கள் குவிப்பு
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அம்பத்தி ராயுடு 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 6 ஓவர்களில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்களை குவித்தது.

குல்கர்னி 2 விக்கெட்டுகள்
ராஜஸ்தான் தரப்பில் குல்கர்னி 2 விக்கெட்டுகளையும்ம், டிம் சவுதி, தெரோன், அங்கித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் வரிசை வீரர்கள் சொதப்பல்
பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. முதல் வரிசை வீரர்களான ரஹானே 16 ரன்களிலும், கேப்டன் வாட்சன் 28 ரன்களிலும் எடுத்து அவுட் ஆகினர்.

சாம்சன் அதிரடி
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 76 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். ஸ்டீவன் சுமித் 23 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது.

பரபர கடைசி 2 ஓவர்கள்
கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய மலிங்கா, தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தியதுடன் அந்த ஓவரில் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது.

திரில் வெற்றி பெற்ற மும்பை
பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் வீசினார். இந்த ஓவரில் அவர் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 179 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணி தங்களது தொடக்க லீக்கில் ராஜஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டது. 8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். 10-வது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தானுக்கு 3-வது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications