
அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
கிறிஸ் மோரிசின் ஒரே ஓவரில் வார்னர் மூன்று பவுண்டரிகளை விளாசினார். ஆனால் இந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில், இந்த கூட்டணிக்கு தவால் குல்கர்னி முற்றுப்புள்ளி வைத்தார். அவரது பந்து வீச்சில் தவான் 10 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் 21 ரன் ரன்-அவுட் ஆக, ஹைதராபாத்தின் உத்வேகம் சீர்குலைந்தது. அதைத் தொடர்ந்து இறங்கிய லோகேஷ் ராகுலும் 2 ரன்னில் வெளியேறினார்.

127 ரன்கள்தான்
இதன் பிறகு ஹைதராபாத் அணியை மீளவிடாமல் ராஜஸ்தான் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக 43 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே அபாரமாக பந்து வீசி ரன் அடிக்க விடாமல் மிரட்டினார்.
20 ஓவர்களில் ஹைதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மோர்கன் 27 ரன்களும், நமன் ஓஜா 25 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் தவால் குல்கர்னி, பிரவீன் தாம்பே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அருமையான தொடக்கம்
பின்னர் 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் (10.2 ஓவர்) எடுத்தனர். சாம்சன் 26 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ராஜஸ்தான் அணி மிக எளிதில் வெல்லும் என்ற நம்பிக்கையே ரசிகர்களிடமிருந்தது.

திடீர் பரபரப்பு
அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் சுமித் (13 ரன்), கருண் நாயர் (1 ரன்) ஏமாற்றினர். 14வது அரைசதத்தை கடந்த ரஹானே 62 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி) டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் போல்டு ஆக, திடீரென சிக்கல் உருவானது. சிறிய இலக்கு என்றாலும் ஆச்சரியப்படும் வகையில் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை ஹைதராபாத் வீரர்கள் இழுத்துபிடித்து கொண்டு சென்றனர்.

கடைசி ஓவர் கலவரம்
கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டூவர்ட் பின்னியும், ஜேம்ஸ் பாக்னரும் களத்தில் நின்றனர். 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் வீசினார். முதல் பந்தில் பாக்னர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் பின்னியும், ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தை சந்தித்த பாக்னர், அதை மிஸ் செய்ததால், டாட் பந்தாக மாறியது. 4வது பந்தில் பாக்னர் சிங்கிள் எடுத்தார். ஐந்தாவது பந்தை, பின்னி, பிட்சை விட்டு இறங்கி வந்து அடித்த போதிலும், சிங்கிள் ரன்தான் கிடைத்தது. ஆனால் ஆட்டம் அப்போது டிராவானது.

கடைசி பந்தில் வெற்றி
கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத் கேப்டன் வார்னர் பீல்டிங்கை அரண் போல் சுற்றி நெருக்கமாக அமைத்தார். சிங்கிள் ஓடினால் ரன் அவுட் ஆக்க ஃபீல்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கடைசி பந்தை பிரவீன்குமார் ஆப்-ஸ்டம்பு திசையில் யார்க்கராக வீச முயற்சித்த போது, அது புல்டாசாக விழுந்தது. அதை எதிர்கொண்ட பாக்னர், ஆப்-சைடில் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ராஜஸ்தானுக்கு 4வது வெற்றி
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. பின்னி 16 ரன்னுடனும், பவுல்க்னெர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 4வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பஞ்சாப், டெல்லி, மும்பை ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. அதே சமயம் 3வது லீக்கில் ஆடிய ஹைதராபாத்துக்கு இது 2வது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications











